பலமுறை கதறிய பெண்.... கண்டுக்கொள்ளாத ஊழியர்கள்! உயரமான ஊஞ்சல் விளையாட்டில்.... சில நொடிக்குள் நடந்த அதிர்ச்சி! சுமார் 550 அடி உயரம்....நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!!
சீனாவின் சிச்சுவான் மாகாண சாகசப் பூங்காவில் பாதுகாப்பு பெல்ட் சரியாக இல்லாததால் 168 மீட்டர் உயர ஊஞ்சலில் இருந்து பெண் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சாகசப் பூங்காவில் நடந்த பரிதாப சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயரமான ஊஞ்சல் விளையாட்டில் பங்கேற்ற பெண் ஒருவர், பாதுகாப்பு வசதிகள் சரியாக இல்லாததால் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஹுவாயிங் பகுதியில் செயல்பட்டு வரும் ‘மாலியுயான்’ சாகசப் பூங்காவிற்கு, கடந்த மே 3-ம் தேதி லியு என்ற பெண் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு மிகவும் பிரபலமான வாட்டர்ஃபால் ஸ்விங் விளையாட்டில் அவர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு தொடங்கும் முன்பே எச்சரித்த பெண்
சுமார் 168 மீட்டர் உயரத்தில் இருந்து வேகமாக ஆடும் அந்த ஊஞ்சலில் அமர்த்தப்பட்டபோது, தனது பாதுகாப்பு பெல்ட் சரியாக இறுக்கப்படவில்லை என்பதை லியு கவனித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்களிடம் பலமுறை கூச்சலிட்டு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த எச்சரிக்கையை ஊழியர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், வழக்கம்போல விளையாட்டைத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சில விநாடிகளில் நேர்ந்த துயரம்
ஊஞ்சல் வேகமாக இயக்கப்பட்ட சில விநாடிகளிலேயே பாதுகாப்பு உபகரணங்கள் கழன்றதாக கூறப்படுகிறது. இதனால் லியு நேராக கீழே விழுந்தார். சுமார் 550 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் இந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது
இந்தச் சம்பவத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது சாதாரண விபத்து அல்ல, வெளிப்படையான பாதுகாப்பு அலட்சியம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட சாகசப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.