வீடியோ: "ஓட்டுநரை தாக்கிய பெண்; நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்த பேருந்து" 13 பேர் பரிதாப பலி!
bus plunged into river at china
சீனாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் நடந்த தகராறில் நிலை தடுமாறிய பேருந்து ஆற்றில் விழுந்ததில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைனா டெய்லி என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி பார்ப்போரின் மனதை பதற வைக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகளை ஏற்றிய பேருந்தானது யாங்ட்ஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கும் பேருந்து ஓட்டுநருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண் ஓட்டுனரை செருப்பால் தாக்கியுள்ளார். பதிலுக்கு பேருந்து ஓட்டுநரும் பயணியை தாக்க முயற்சி செய்துள்ளார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த சண்டையால் நிலைதடுமாறிய பேருந்தானது பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் தலைகீழாக விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 13 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மற்ற பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தெளிவாகத் தெரிகின்றது.