எனக்கு சாவே வரக்கூடாது.... எப்போது இளமையாக இருக்க 48 வயதில் தொழிலதிபர் செய்த விசித்திரம்! ரூ.20 கோடி செலவில் உருவாக்கிய "பேபி குளோன் ''..... தலை சுத்த வைக்கும் ஆய்வு!!!
அமெரிக்க தொழிலதிபர் பிரையன் ஜான்சன் தனது உடலின் உயிரணுக்களால் ஆய்வகத்தில் 'பேபி குளோன்' உருவாக்கி வருவதாக அறிவித்தது உலகம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்றும் இளமையாக வாழும் முயற்சிக்காக உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ள அமெரிக்க தொழிலதிபர் பிரையன் ஜான்சன், தனது உடலின் உயிரணுக்களைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் 'பேபி குளோன்' ஒன்றை உருவாக்கி வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் பதிவின் மூலம் வெளியான இந்த தகவல் மருத்துவ உலகிலும், இணையத்திலும் பரபரப்பான விவாதத்தை கிளப்பியுள்ளது.
உயிரணுக்களில் இருந்து புதிய ஆய்வு
48 வயதான பிரையன் ஜான்சன், தனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த அணுக்களை நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆரம்பக்கட்ட கரு நிலைக்கு மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். அந்த உயிரணுக்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் உடலுக்குத் தேவையான புதிய உறுப்புகளை உருவாக்கவும், புதிய மருந்துகளைச் சோதிக்கவும், இளமையான செல்களை மீண்டும் உடலில் செலுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஷாக் வீடியோ...விமானத்தில் நடக்க முடியாமல் தடுமாறும் டிரம்ப்..! அமெரிக்க அதிபர்க்கு என்னாச்சு? அதிர்ச்சியில் அரசியல் களம்!!!
அரிய நோய்க்கான தீர்வை எதிர்பார்க்கும் முயற்சி
சமீபத்தில் தனக்கு 'ஆட்டோ இம்யூன் கேஸ்ட்ரிடிஸ்' என்ற அரிய வகை வயிற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கும் முதுமையை தாமதப்படுத்துவதற்கும் இந்த Therapeutic Cloning சார்ந்த ஆய்வு உதவக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது உடல்நல பராமரிப்பு மற்றும் இளமையைத் தக்கவைத்துக்கொள்ள ஆண்டுதோறும் சுமார் ரூ.20 கோடி வரை செலவிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிவியல் உலகில் ஆதரவும் எதிர்ப்பும்
பிரையன் ஜான்சனின் அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கலவையான எதிர்வினைகள் பதிவாகியுள்ளன. சிலர் இதை எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதினாலும், மற்றொரு தரப்பு இது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படாத கூற்று என்றும், விளம்பர நோக்கத்திற்கான முயற்சியாக இருக்கலாம் என்றும் விமர்சித்து வருகிறது.
இதுவரை உலகில் உயிருடன் இருக்கும் மனித குளோன் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முழுமையான மனித குளோனிங் பல நாடுகளில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான ஆராய்ச்சிக்காக செல்களை மட்டும் பயன்படுத்தும் தெரபியூட்டிக் குளோனிங் முறைக்கு சில நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.