இப்படி கூட இருக்குமா? குழந்தையின்மை பிரச்சனையை சரிசெய்ய மருத்துவமனைக்குச் சென்ற 26 வயது இளைஞர்! ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்ததும் கண்ட அதிர்ச்சி... வினோத சம்பவம்!!!
குழந்தையின்மை பிரச்சினைக்காக டெல்லி மருத்துவமனை சென்ற 26 வயது இளைஞருக்கு அரிய மரபணு குறைபாடு கண்டறியப்பட்டதுடன், புற்றுநோய் அபாயமும் தெரியவந்தது.
குழந்தையின்மை பிரச்சினைக்காக டெல்லி மருத்துவமனைக்குச் சென்ற 26 வயது இளைஞருக்கு, மருத்துவப் பரிசோதனையில் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு விந்தணுக்கள் இல்லாதது முதலில் தெரியவந்தது. தொடர்ந்து எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ.யில் இடுப்புப் பகுதியில் கருப்பை, கருக்குழாய்கள் போன்ற பெண் உறுப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண் குரோமோசோம்கள் இருந்தும் பெண் உறுப்புகள்
மரபணுப் பரிசோதனையில் அவருக்கு 46, XY என்ற ஆண் குரோமோசோம்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் Persistent Müllerian Duct Syndrome எனப்படும் மிக அரிய மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கருவில் ஆண் குழந்தை உருவாகும்போது இயல்பாக மறைந்து போக வேண்டிய முலேரியன் குழாய் சார்ந்த உறுப்புகள் மறையாமல் உடலுக்குள் தொடர்ந்து இருப்பதே இந்த பாதிப்பின் முக்கிய காரணமாகும். உலகம் முழுவதும் இதுவரை 300-க்கும் குறைவானவர்களிடம் மட்டுமே இந்த நிலை பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
26 ஆண்டுகளாக வயிற்றுக்குள் இருந்த விதைப்பைகள்
மேலும், பிறந்தது முதல் 26 வயது வரை அவரது இரு விதைப்பைகளும் உடலுக்கு வெளியே இறங்காமல் வயிற்றுப் பகுதியில் இருந்துள்ளன. நீண்ட காலம் வயிற்றுக்குள் தங்கியிருக்கும் விதைப்பைகளில் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம் என்பதால், மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
லேப்ராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை செய்து, உடலுக்குள் இருந்த கருப்பை, கருக்குழாய்கள் மற்றும் இரு விதைப்பைகளும் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. இதையடுத்து அகற்றப்பட்ட திசுக்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
விதைப்பையில் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றம்
ஆய்வு முடிவில், இடது விதைப்பையில் Germ Cell Neoplasia In Situ எனப்படும் புற்றுநோயாக மாறக்கூடிய ஆரம்பகட்ட மாற்றங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், குழந்தையின்மைக்கான காரணத்தை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தீவிர புற்றுநோய் அபாயத்தையும் முன்கூட்டியே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
அரிய மரபணு குறைபாடு கண்டறியப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய புற்றுநோய் அபாயத்துக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது மருத்துவத் துறையில் கவனம் பெற்றுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி, அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: எவ்வளவு கூட்டம்... இப்படியா ரயிலில் தொங்கிட்டு போறது! ஓடும் லோக்கல் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பெண்! பகீர் வீடியோ..!!!