திருநங்கையுடன் திருமணம்.! காதலியுடன் நிச்சயதார்த்தம்.! தமிழக இளைஞனின் தில்லாங்கடி செயல்!
திருநங்கையை காதலித்து திருமணம் செய்துவிட்டு, பின்னர் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்ததால் திருநங்கை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் HRமேனேஜராக வேலை செய்து வந்தவர் சோபனா. திருநங்கையான இவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர். இந்தநிலையில், கொரியர் பாய் கணேஷ்குமார் என்பவர் திருநங்கை சோபனாவை, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் அவரின் காதலை ஏற்க மறுத்த சோபனா, கணேஷ்குமார் தன்னை விரட்டி விரட்டி காதலித்ததால் ஒருகட்டத்தில் அவருடைய காதலை ஏற்றுள்ளார் சோபனா. ஆனால் இவர்கள் இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சென்னை அமைந்தகரை அருகே வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
திருமணமாகி இருவரும் ஒன்றாக வசித்துவந்த நிலையில், நாளடைவில் இருவருக்கும் பிரச்சனை வந்துள்ளது. இதனையடுத்து கணேஷ்குமார் வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதை அறிந்த சோபனா அவரிடம் ஏன் இவ்வாறு செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் சோபனாவை தவிக்கவிட்டு கணேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சோபனா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ளவர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இந்த பிரச்சனையால் சோபனா அவரது வேலையையும் இழந்துள்ளார்.
இந்தநிலையில் கணேஷ்குமார் அவரது இரண்டாவது காதலியை திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சோபனா காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும், சோபனாவும், கணேஷ்குமாரும் கணவன் மனைவி என திருமண உறுதி மொழிபத்திரம் எழுதிக்கொடுத்து திருமணம் செய்துகொண்டதால், தனது கணவர் கணேஷ்குமாரை எப்படியும், தன்னுடன் சேர்த்து வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சோபனா காத்துக் கொண்டிருக்கிறார்.