சென்னையில் வெளுத்துவாங்கிய மழையில் சுவர் இடிந்து பெண் பரிதாப பலி! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!
women died for rain

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. சென்னை மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது.
இந்நிலையில், மண்ணடி ஐயப்பசெட்டி தெருவிலுள்ள பழமையான ஓட்டு வீட்டின் சுவர் அதிகாலையில் இடிந்து விழுந்துள்ளது. அந்த வீட்டில் ஜெரினாபானு என்ற பெண் நேற்று தனது குழந்தைகள் மற்றும் தாயாருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருக்கும்போது கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஜெரீனாபானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக அவருடன் உறங்கிய மகள் மற்றும் மகன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஜெரீனாபானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.