தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா வருகிறதா! - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
will corona attack second time vijayabaskar answers

தமிழகத்தில் ஒருமுறை கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா வருகிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனோவால் உலகம் முழுவதும் இதுவரை 29 லட்சத்திற்கும் மேலான பாதிப்பும் 2 லட்சம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. கொரோனா பதிப்பில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்திற்கும் மேலானோர் குணமாகியுள்ளனர்.
ஒருமுறை கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா தாக்குமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. காரணம் பொதுவாக ஒரு வைரஸ் ஒருவரை பாதித்தால் மீண்டும் அந்த வைரஸ் தாக்காது என நம்பப்படும்.
ஆனால் கொரோனாவை பொறுத்தவரை தென்கொரியா மற்றும் சீனாவில் கொரோனா தாக்கிய சிலருக்கு மீண்டும் கொரோனா வந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் அதே போன்று ஒருமுறை கொரோனா பாதித்தவர்களை மீண்டும் பாதித்துள்ளதா என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ஒருமுறை கொரோனா பாதித்து குணமான யாருக்கும் மீண்டும் கொரோனா பாதிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் கொரோனா பாதித்த வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால் மீண்டும் கொரோனா பாதிக்க வாய்ப்புள்ளதால் குணமானவர்களை 14 நாட்கள் கட்டாய தனிமையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.