கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் சித்த மருத்துவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Why should the government treat sidha doctors with suspicion?
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனாலும் இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எந்த நாட்டிலும் கண்டுபிடிக்க இயலவில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளிலும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துவரும் சூழலில், இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மூலம் இதற்கான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், கொரோனாவை சித்த மருத்துவத் தால் குணப்படுத்தப்ப முடியும் என்று கூறி விளம்பரப்படுத்தியதால், அவர் போலி மருத்துவர் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து, அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகஅரசு மற்றும் மத்தியஅரசு மீது கடுமையாக சாடியது. சித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினால், அவர்களது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழல் நம் நாட்டில் நிலவுகிறது.
மத்திய மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான சிறை கைதிகள் உள்பட 400 பேர் சித்த மருத்துவத்தினால் குணமடைந்துள்ளனர். ஒரு உயிர் பலி கூட ஏற்படவில்லை.
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.