சசிகலா அமமுக கொடியை பயன்படுத்தாமல் அதிமுக கொடியை பயன்படுத்தியது ஏன்.? விளக்கம் கொடுத்த டிடிவி தினகரன்.!
அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை சசிகலாவுக்கு உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, சசிகலாவை அழைத்து செல்ல தனியாக கார் தயார் செய்யப்பட்டிருந்தது.
அந்த காரின் முகப்பில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலா அவர்கள் அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் இது குறித்து கூறுகையில், அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை சசிகலாவுக்கு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு உள்ளது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதிமுகவை மீட்டெடுக்க தான் அமமுக உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362