எஸ்.ஐ.வில்சனை கொலை செய்த தீவிரவாதிகளுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிய 2 பேர்! போலீசாரின் அதிரடி!
two people arrested for giving fake sim on SI murder case
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் வில்சனை சுட்டு மற்றும் கத்தியால் குத்திக் படுகொலை செய்தனர்.
இந்தநிலையில் எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் இரண்டு பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? என்பது குறித்து தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் உள்ளிட்ட 2 பேரை சென்னை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள செல்போன் கடையில் போலியான முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியுள்ளது தெரியவந்தது. இதனால, எஸ்ஐ வில்சன் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கும், காஞ்சிபுரத்தில் சிம்கார்டு வாங்கிய நபர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.