அமமுகவுக்கு இதுதான் இனி வேலையே.. ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன டிடிவி.. விஜய்க்கு எதிராக கொக்கரிப்பு..!
TTV Dhinakaran TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேர செயல்களை அம்பலப்படுத்துவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மக்கள் முன்னிலையில் தவெக அம்பலப்படுத்தப்படும் என அமமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி:
AMMK Vs TVK: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 மிகப்பெரிய திருப்புமுனையாக தமிழக அரசியலில் அமைந்து இருந்தது. 75 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முடிவுகட்டி, தமிழ்நாடு மாநில முதல்வராக கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் நடிகர் விஜய் தமிழ்நாடு முதல்வராக அரியணை ஏறி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ல் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியடைந்து இருந்தாலும், பெரும்பான்மைக்காக இறுதியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உட்பட பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துகொண்டது.
இதையும் படிங்க: "குதிரை பேரம் தான் தூய சக்தியின் துர்நாற்றம்" - தவெகவை கடுமையாக சாடிய டிடிவி.. காரணம் என்ன?
மன்னார்குடி எம்.எல்.ஏ:
அதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெளியில் இருந்தும் ஆதரவு கிடைத்தது. இதனிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு தொடக்கத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுவதில் முரண்பாடுகள் நீடித்து வந்தன. அப்போது, அதிமுக+பாஜக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் காமராஜ், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். அதுதொடர்பான கடிதமும் வெளியாகி இருந்தது.
கண்டனம்:
ஆனால், இந்த கடிதம் உண்மை இல்லை என டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்து இருந்தார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பிலும், பதவியேற்பின்போதும் காமராஜ் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்ததால், அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இவ்வாறாக அரசியல் பரபரப்பு நிகழ்வுகள் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. இந்நிலையில், இந்த விஷயத்துக்கு டிடிவி தினகரன் கடுமையான கண்டனமும் தெரிவித்துள்ளார்.
துர்நாற்ற அரசியல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
நன்றி:
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்பலப்படுத்துவோம்:
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!" என தெரிவித்துள்ளார்.