தமிழக கபடி வீரர் கொலையில் 3 பேர் சிக்கினர்.! ஒருவர் தலைமறைவு.!
தமிழக கபடி வீரர் கொலையில் 3 பேர் சிக்கினர்.! ஒருவர் தலைமறைவு.!
மும்பை தாராவி காமராஜ் சால் பகுதியை சேர்ந்தவர் தமிழ் வாலிபர் விமல்ராஜ் (வயது25). கபடி வீரரான இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கிராமம். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீட்டருகே கிரிக்கெட் ஸ்டம்பால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் முக்கிய குற்றவாளியான மல்லேஷ்(30) என்பவரை கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மல்லேஷ் தனது நண்பர்களுடன் பொது இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை விமல்ராஜ் தட்டிகேட்டுள்ளார். இதன் காரணமாக விமல்ராஜிற்கும் மல்லேசுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 3.30 மணியளவில் விமல்ராஜ் தனது நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தபோது அங்கு வந்த மல்லேஷ் மற்றும் அவரது 3 நண்பர்கள் சேர்ந்து கிரிக்கெட் ஸ்டம்பால் விமலை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
பலத்த காயமடைந்து நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த விமல்ராஜை நண்பர்கள் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விமல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாராவி போலீசார் விமல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மல்லேஷை கைது செய்தனர். அடுத்த சில மணி நேரத்தில் மற்ற 2 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும். தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.