திருச்சி அருகே பயங்கரம்: கணவன் மனைவி படுகொலை... நடந்தது என்ன?
திருச்சி அருகே பயங்கரம்: கணவன் மனைவி படுகொலை ... நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வயலில் தங்கி வேலை செய்து வந்த கணவன் மற்றும் மனைவி மர்மமானவர்களால் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சோபனபுரத்தில் வசிப்பவர் தங்கவேலு மகன் ராஜ்குமார்(29), இவருக்கும் சாரதா(19) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சோபனபுரம் விஜயசேகரின் வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார் ராஜ்குமார். இதனால் வயலிலேயே அவரும் அவரது மனைவியும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மற்றும் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திங்கள் கிழமை காலை வயலில் வேலைக்கு வந்தவர்கள் பார்த்தபோது இருவரும் கட்டிலில் சடலமாக கடந்துள்ளனர். அவர்களது தலையில் காயங்களும் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி எஸ்பி சுஜித் குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். மேலும் திருச்சியில் இருந்து தடையியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர் . இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.