தற்காலிக ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
temporary teachers will be made permanent

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதோடு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அரசுப்பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாக சிறந்து விளங்கி வருகின்றனர். மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விளக்கத்தை பொது மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் தற்காலிக ஆசிரியர்கள் குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் ரூபாய் 7500 சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு அவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்" எனவும் உறுதி அளித்துள்ளார். இந்த செய்தி தற்போது தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் பலருக்கு ஒரு மனநிறைவை அளித்துள்ளது.