பள்ளி துவங்கிய முதல் நாளே புதிய விதிமுறை அமல்; பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை.!
tamilnadu gvt schools - teachers - today - biometric attendence

தமிழக அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபகாலமாக பல புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் அமைக்கும் பணி அரசு பள்ளிகளில் துரிதமாக நடைபெற்று வந்தது.
முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேர் பயன்பெறுவர் என்றும், இதேபோல் 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேரும் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.15.30 கோடி செலவிடப்பட்டு பயோமெட்ரிக் முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி மீண்டும் துவங்கி உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 6000 அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் எப்போது பணிக்கு வருகிறார்கள். எப்போது செல்கிறார்கள் என்பதை சென்னையில் இருந்து கொண்டே பார்க்க முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். அவ்வாறு தாமதமாக வந்தாலும் தலைமையிடம் சிக்கிக் கொள்வது உறுதி.