மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு திருவுருவச் சிலைகள்; தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
tamilnadu govt announces statue for leaders
தமிழகம் முழுவதும் தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக அவரவர் சொந்த ஊர்களில் திருவுருவச் சிலைகள் நிரூபி மேலும் நூலகங்களையும் அமைக்க வேண்டி தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் அன்னைக்கு தனது பாடல்களால் மலரும், மாலையும் சூட்டி அழகு பார்த்த, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில், ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
கி.பி.7 ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, அன்னார் பிறந்த இடமான மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும்,அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
விவசாயிகளின் நலனைக் காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டுத் திட்டம் தொடங்க காரணமகா இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டர் அவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக, கோவை மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் ரூ.1 கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், நூலகமும் அமைக்கப்படும்.
நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற "ராஜ வாய்க்கால் ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகர்" அவர்களுக்கு, ஜேடர்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் குவிமாடத்துடன் (Dome) திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் அவர்களை சிறப்பிக்கும் விதமாய், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது மணி மண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைப்பதுடன், அவ்வளாகத்தில் ஒரு நூலகமும் அமைக்கப்படும்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையருக்கு எதிராக முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய வீரன் சுந்தரலிங்கனார் அவர்களை சிறப்பிக்க, தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் அமைந்துள்ள மணி மண்டபத்தை ரூ.75 லட்சம் மதிப்பில் புனரமைப்பதுடன், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்.
விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசனவசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்த நாள் (ஜனவரி 15) அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
பவானியில் வாய்க்கால்களை வளைத்து வளைத்து வெட்டுவதால் அதிக பரப்பளவு பாசனம் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் விவசாயிகளின் நலன்களுக்காக, திறம்பட வாய்க்கால்கள் அமைத்த காலிங்கராயன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தை 5ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக் கோனின் வீரத்தையும் வரலாற்றையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு, ஆண்டுதோறும் ஜூலை 11ம் நாள் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது சென்னையை தமிழகத்தின் தலைநகராக தொடர பாடுபட்டவரும், எழுத்து சீர்திருத்தத்தின் போது ஐ-யும், ஔ-வும் தமிழ் மொழியில் தொடர செய்தவருமான ம.பொ.சிவஞானம் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அன்னாரது பிறந்தநாளில் அரசு சார்பாக மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி தமிழ் நாளிதழை தொடங்கி, பாமரரும் பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்த சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, அன்னார் பிறந்தநாளில் அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362