மாணவிகளை தரக்குறைவாக பேசிய கல்லூரி முதல்வர்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்
students strike at thanjavur
தஞ்சை, குந்தவை நாச்சியார் அரசு கல்லுாரி முதல்வர் பெற்றோர், மாணவியரை தரக்குறைவாக பேசியதால் நேற்று கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டத்தில் இறங்கி கல்லுாரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லுாரி. இந்த கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த 13ம் தேதி, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், பெற்றோர் - ஆசிரியர் கழக கட்டணமாக, ஒவ்வொரு மாணவியிடமும், ஆண்டுக்கு, 1,100 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. முன்னாள் மாணவர் சங்க கட்டணமாக, 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதை தவிர, டியூஷன் கட்டணம் என்ற பெயரில், ஆண்டுதோறும், 265 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு வசூல்செய்யப்படும் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியரின் போராட்டத்தை சமாளிக்க கல்லுாரி முதல்வர் திருவள்ளுவர், சமாதான பேச்சு நடத்துவதாக அறிவித்தார். இதில் பெற்றோர், மாணவியர், கல்லுாரி துறைத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து மாணவிகள் அன்று போராட்டத்தை கைவிட்டனர்.
கல்லூரி முதல்வர் அறிவித்தபடி, நேற்று முன்தினம், கல்லுாரியில் சமாதான கூட்டம் நடந்தது. அப்போது கல்லுாரி முதல்வர், மாணவியரையும், பெற்றோரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த மாணவியர் முதல்வரை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரி வளாகத்துக்கு வெளியே, நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களுடன் தஞ்சை தாசில்தார், அருணகிரி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர்.