அராஜகம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை.!போலீஸ் அதிகாரி கடும் எச்சரிக்கை.!
நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் அராஜக செயல்களில் ஈடுபடக் கூடாது என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பல மாதங்களாக மூடப்பட்டுள்ள கல்லூரிகள் திறப்பதற்கான அறிவிப்புகள் கடந்த சில வாரங்களுகளுக்கு முன் வெளியானது. இந்தநிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடிக்கிடந்த கல்லூரிகள் இன்று (07.12.2020) முதல் திறக்கப்படுகிறது.
முதல் கட்டமாக மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகள் திறக்கப்படுகிறது.நீண்ட நாட்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டம் என்ற போர்வையில் தகராறில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தில் வட சென்னை இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் மாணவர்களை கூட்டமாக சேர்த்துக்கொண்டு, பேருந்து கூரையின் மீது ஏறி பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வது போன்ற அராஜக செயல்களில் மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது.
பேருந்தில் பயணம் செய்யும் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. மாணவர்கள் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களும், கல்லூரிக்கு வருவதற்கு முன்பே மாணவர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதுபோன்ற செயல்களை தவிர்த்து, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362