தலைமை ஆசிரியையை செருப்பால் அடித்த பெற்றோர்; சாதி பாகுபாட்டால் ஏற்பட்ட சர்ச்சை
parents attacked head mistress
சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததால் எழுந்த சர்ச்சையில் ஒரு பெண் தலைமை ஆசிரியையை செருப்பால் தாக்கினார்.
பள்ளிகளில் சாதி, மத அடிப்படையில் மாணவ மாணவிகளை பிரித்து பார்க்க கூடாது என்பதற்காக தான் சீருடை அணியும் பழக்கம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒருசில ஆசிரியர்களால் மாணவர்கள் பிரித்து பார்க்கப்படுவது வேதனையாக உள்ளது.
கடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசுயா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததாக புகார் எழுந்தது.
இதை பற்றி கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் அங்கிருந்த ஒரு பெண் தலைமை ஆசிரியையை அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுசுயாவை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த மாதிரியானா ஒரு நிகழ்வு பள்ளிகளில் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு, பள்ளிகளில் சாதி சான்றுகளை பெரும் வழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.