திருச்சியில் ஒரு மினி ஊட்டி.. இயற்கை அழகை கொண்ட சொர்க்கம்.. போகலாம் வாங்க.!
திருச்சி-பெரம்பலூர்-சேலம் மாவட்டங்களை இணைக்கும் பச்சை மலை வாரத்தின் இறுதி நாட்கள் அல்லது கோடைகால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஆகும்.
திருச்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், ஒருநாள் டிரிப் செல்ல ஏற்ற தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பச்சைமலை:
தமிழகத்தில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தளங்கள் சமூக வலைதளங்களின் மூலம் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு இணையான இயற்கை அழகைக் கொண்ட இந்த பகுதிகள், குறைந்த செலவிலும் குறுகிய பயண நேரத்திலும் மனதுக்கு நிறைவான அனுபவத்தை வழங்குகின்றன. அந்த வரிசையில், திருச்சிக்கு அருகே உள்ள பச்சை மலை சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
சுத்தமான காற்று:
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பச்சை மலை, திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் வட்டாரத்தில் பரவியுள்ளது. திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பரந்து விரிந்துள்ள இந்த மலைப்பகுதி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 19,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பளவில் அடர்ந்த காடுகள், மூலிகை வாசனை நிறைந்த காற்று, இதமான காலநிலை ஆகியவை இந்தப் பகுதியை தனித்துவமாக மாற்றுகின்றன.
இயற்கை அழகு:
முழுவதும் பசுமை போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கும் பச்சை மலையில், 150-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசித்து வருகின்றன. கோரையாறு, மங்களம் அருவி, மயில் ஊற்று போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் இந்தப் பகுதியில் உள்ளன. ஊட்டி, கொடைக்கானலை நினைவூட்டும் ஹில் வியூ பாயிண்டுகள் உள்ளன. மலை உச்சியில் இருந்து பரந்த வெளிகளையும் பச்சைமலையின் இயற்கை அழகையும் ரசிக்கலாம்.
சாகச விரும்பிகளுக்காக டிரெக்கிங் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக சுற்றுலாத் துறை சார்பில் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், இயற்கை விரும்பிகளும் குடும்பத்துடன் பயணம் செய்ய விரும்புவோருக்கும் பச்சை மலை ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.