Nagapattinam: கொலை வழக்கு ஆசாமி கஞ்சா தனிப்படையிடம் கைது.. நடந்தது என்ன?
Velankanni News: வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கில் சாமியார் வேடத்தில் தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா கடத்தும் போது தனிப்படையிடம் சிக்கிய கொலை வழக்கு குற்றவாளியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் அருகே தனிப்படை போலீசாரால் வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, ஆரியநாட்டு தெருவை சேர்ந்த கிரேட்டன் (எ) ரோசரி கிரேட்டன் கடந்த 2023 முதல் சாமியார் வேடத்தில் தாடி வளர்த்து சுற்றி வந்தார். இதுவரை யாரும் அவரை அடையாளம் காணவில்லை.
அதிரடி கைது:
கடந்த 2022-ம் ஆண்டு தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்த பைனான்சியர் மனோகர் (வயது 35) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. வேளாங்கண்ணி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட ரோசரி கிரேட்டன், இந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருக்கிறார்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் குணசேகரனை ஓட ஓட வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு…..!
கால்களில் எலும்பு முறிவு:
தனிப்படை போலீசாரின் விசாரணையில், ரோசரி கிரேட்டன் ‘கிளப்ஹவுஸ்’ செயலி மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விநியோகம் செய்து வந்ததும், மனோகர் கொலைக்கும் அதே செயலியை பயன்படுத்தியதும் தெரியவந்தது. சென்னையிலிருந்து தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி கஞ்சா கடத்த முயன்ற நிலையில், தனிப்படை போலீசார் கைது முயற்சித்த போது, டூவீலரில் தப்பிக்க முயன்ற அவர் கீழே விழுந்து கால்கள் முறிந்ததால், நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர கண்காணிப்பு:
ரோசரி கிரேட்டன் மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், 2023 முதல் சாமியார் வேடமிட்டு சுற்றி வந்ததும், ‘கிளப்ஹவுஸ்’ செயலி மூலம் கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டதும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் போலீசார் மற்றும் தனிப்படை படையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!