பண மோசடி.. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தப்பியோடிய தம்பதியினர்.. போலீசில் சிக்கியது எப்படி.?
பண மோசடி.. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தப்பியோடிய தம்பதியினர்.. போலீசில் சிக்கியது எப்படி.?
ஈரோடு கருங்கல்பாளையம், கக்கன் நகர் பகுதியில் செல்வராஜ் - கலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தம்பதியரிடம் கருங்கல்பாளையம், கக்கன் நகர், கிருஷ்ணம்பாளையம், ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீபாவளி சிறு சேமிப்பு சீட்டு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி சீட்டு முடிவடைந்த நிலையில் அந்த சீட்டில் பணம் செலுத்தியவர்கள் செல்வராஜ்-கலா தம்பதியினரிடம் பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளனர். அதற்கு அந்த தம்பதியினர் ஓரிரு நாட்களில் தருவதாக சொல்லி அனுப்பிவிட்டு பின் தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் செல்வராஜ்-கலா தம்பதியினர் தலைமறைவானதை அறிந்ததால் ஏமாற்றமடைந்த பணம் செலுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலா வீட்டை முற்றுகையிட்டனர். மேலும் இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் கலா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அந்த தம்பதியினர் வீட்டை காலி செய்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கபட்ட மக்கள் எழுத்துப்பூர்வமாக காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும் 30லட்சம் ரூபாய் வரை செல்வராஜ்-கலா தம்பதியினர் மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் தலைமறைவான செல்வராஜ் மற்றும் கலாவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் மொபைல் நம்பர் டிரேஸ் செய்து பார்த்ததில் அவர்கள் திருச்சியில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அங்கு சென்று காவல் துறையினர் கண்காணித்ததில் கலா மற்றும் அவரது கணவர் காந்தி நகரில் கடை நடத்துவதும், அரியமங்கலத்தில் வசிப்பதையும் கண்டுபிடித்தனர். பின்னர் செல்வராஜ் மற்றும் கலாவை போலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.