போகிப் பண்டிகையின் போது இதனை செய்தால் கடும் தண்டனை! அமைச்சர் எச்சரிக்கை!
minister kc karupannan talk about bogi festival
போகிப் பண்டிகையின்போது எரிக்கப்படும் டயா், டியூப், நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் தீங்குகள் ஏற்படும். எனவே இதனை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.
போகி பண்டிகையின் போது மக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார தொடக்க விழா சென்னை கிண்டியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்றது. அந்த விழாவில் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடியசைத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மாசு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை எரிப்பவர்களை கண்டறிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.