அழுதுகொண்டே இருந்த குழந்தை... அடுத்த நொடி கள்ளக்காதலன் செய்த பயங்கரம்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!
மயிலாடுதுறை அருகே மூன்று வயது குழந்தை உயிரிழந்த வழக்கில், தாயும் அவரது கள்ளக்காதலனும் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மூன்று வயது குழந்தை உயிரிழந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்த நிலையில், கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயும் அவரது கள்ளக்காதலன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சந்தேக மரணமாக தொடங்கி கொலை வழக்காக மாறியது
சீர்காழி அருகே ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கனிவண்ணனின் மனைவி கவிப்பிரியாவுக்கு, திருமணத்திற்கு முன்பே அபினேஷுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் அந்தத் தொடர்பு தொடர்ந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, கவிப்பிரியா தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 25ஆம் தேதி, தனது மூன்று வயது மகனை பலத்த காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கவிப்பிரியா, குழந்தை குளியலறையில் வழுக்கி விழுந்ததாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட குழந்தை, ஜூன் 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சிசிடிவி பதிவில் அம்பலமான உண்மை
குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகமடைந்த தந்தை கனிவண்ணன் அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ நாளில் அந்தப் பகுதிக்கே வரவில்லை என்று அபினேஷ் தெரிவித்திருந்தாலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது அவரது வாக்குமூலம் பொய்யென தெரியவந்தது.
விசாரணையில், கவிப்பிரியா வெளியே சென்றிருந்த நேரத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை ஆத்திரத்தில் அபினேஷ் தள்ளியதால், சுவரில் தலை மோதி பலத்த உள்காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் உண்மையை மறைக்க இருவரும் சேர்ந்து குழந்தை வழுக்கி விழுந்ததாக நாடகமாடியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா பிரியா பரிந்துரையின் பேரில் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி அபினேஷ் கடலூர் மத்திய சிறையிலும், கவிப்பிரியா திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: டிஎன்ஏ டெஸ்ட்டில் சிக்கிய தவெக நிர்வாகி: சத்தியமங்கலத்தில் அம்பலமான பகீர் உண்மை.. 17 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!