கழிவறை குழிக்குள் சிக்கிய வாலிபரின் கை! தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்பு
Man hand struck into indian toilet
தஞ்சையில் இருந்து மதுரைக்கு வந்த வாலிபர் ஒருவரின் கை கழிவறை குழிக்குள் சிக்கியதால் மிகவும் பரபரப்பு உருவானது.
தஞ்சை திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மணிமாறன்(29) என்பவர் தனது உறவினர்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார். மதுரை பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பியுள்ளார்.
பின்னர் அதே பங்கில் இருந்த கழிவறைக்கு சென்ற மணிமாறனின் பையில் இருந்த கார் சாவி கழிவறை குழிக்குள் விழுந்தது. அதை எடுக்க உடனே குழிக்குள் கையை விட்டுள்ளார் மணிமாறன்.
ஆனால் அவரால் மீண்டும் கையை வெளியே எடுக்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடி பின்னர் சத்தம் போடவே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
பின்னர் மதுரை நகர தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கழிவறை கோப்பையை உடைத்து மணிமாறனை மீட்டனர். மயக்கமடைந்த மணிமாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.