ஆன்லைன் தேர்வு கேட்டு அமைச்சர் இல்லம் முற்றுகை.. மாணவர்களை விரட்டிய காவலர்கள்..!
ஆன்லைன் தேர்வு கேட்டு அமைச்சர் இல்லம் முற்றுகை.. மாணவர்களை விரட்டிய காவலர்கள்..!
நேரடி தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, அவர்கள் காவல் துறையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் பள்ளிகளில் வைத்து நடைபெறும் என அம்மாநில பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சில மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மராட்டிய பள்ளிக்கல்வித்துறை ஆப்லைன் முறையில் தேர்வு நடத்த உறுதியாக இருக்கிறது.
இதனால் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து மராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா ஏக்நாத் கெய்கவாடின் வீட்டு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல கூறி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், மாநில அரசுக்கு எதிராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள், வன்முறை செயல்களை கையில் எடுப்பது போன்று செயல்பட்டுள்ளனர். சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு லேசான தடியடி நடத்தி அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
மேலும், மாணவர்கள் போராட்டம் எப்படி ஒருங்கிணைக்கப்ட்டது என்ற விசாரணையும் நடந்து வருகிறது. விசாரணையில், இந்துஸ்தானி பாவ் என்ற அமைப்பின் தூண்டுதலின் பெயரால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததாகவும் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெறுகிறது.