தமிழகத்தில் பரபரப்பு: மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; அடுத்து என்ன நடக்கும்..!!
hydro carbon in tamilnadu 3 places

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் அந்த பகுதி மக்கள் அந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்களின் இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களின் ஆதரவு பெருகியது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டமானது மத்திய அரசால் கைவிடப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நெடுவாசல் பிரச்சனை தீர்ந்து சிறிது காலம் நிம்மதியாக இருக்கும் தமிழக மக்களுக்கு இந்த ஒப்பந்தம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவெனில் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது தான்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன்கள் எடுக்க அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இதில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளது.
ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும். இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் மூன்று இடங்களில் இரண்டு இடங்கள் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது மேலும் ஒரு இடத்தினை ஆய்வின் மூலம் கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறுகிய காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ள தமிழக மக்கள் இந்த ஒப்பந்தத்தை கேள்வி பட்டவுடன் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். இனி அடுத்து தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.