"கடலில் எல்லைகள் எங்களுக்கு எப்படி தெரியும்?" தமிழக மீனவரின் உருக்கமான வீடியோ காட்சி!
how do we know the boundary in sea
மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதால் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், கைது செய்யப்பட்டனர் என நாம் பல்வேறு செய்திகளை படித்திருப்போம். ஆனால் ஏன் மீனவர்கள் அப்படி எல்லை தாண்டி செல்கிறார்கள் என்ற கேள்வியும் பலருக்கு எழுந்திருக்கும். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மீனவர் ஒருவர் தான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள அந்த மீனவர் "நாங்கள் அனைவரும் கடல் தாயின் பிள்ளைகள்; எங்களுக்கு ஏது எல்லைகள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசும் அவர் "கடலின் குறுக்கே இதுதான் இந்திய எல்லை என்று எந்தவித வேலிகளோ கோடுகளோ கடலில் போடப்படுவதில்லை. அப்படி போடப்பட்டிருந்தால் நாங்கள் தாண்டிச் செல்லும் போது எங்களை தாக்குவது நியாயமான ஒன்று. ஆனால் எந்தவித எல்லைகளையும் குறிப்பிடாமல் நாங்கள் தாண்டி வந்து விட்டோம் என்று எங்களை தாக்குகின்றனர்.
இந்த கடல் தான் எங்களின் தாய். அதிகமாக எங்கு மீன்கள் கிடைக்கின்றதோ அங்குதான் நாங்கள் மீன்களை பிடிக்க முடியும். அப்படி இருக்க இந்த எல்லை பாகுபாடு இருப்பது எதற்கு. மேலும் இந்த எல்லைகள் விலை உயர்ந்த ஜிபிஎஸ் கருவிகள் மூலமே கண்டுபிடிக்க முடியும். 50 ஆயிரத்திற்கு மேல் ஆகும் அந்த கருவிகளை எங்களால் வாங்கி பயன்படுத்த முடிவதில்லை அப்படி இருக்க எல்லைகளை நாங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.