தொண்டை வலியால் அவதிப்பட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை! அடுத்த சில நாட்களிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி!
Girl dead by wrong treatment in hospital
செங்கல்பட்டு, மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவரது மகள் சங்கீதா. 22 வயது நிறைந்த இவர் சமீபகாலமாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்த மறுநாளே சங்கீதா ரத்தவாந்தி எடுத்து சுயநினைவை இழந்துள்ளார். இதுகுறித்து அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் கேட்ட நிலையில், அறுவை சிகிச்சையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். நாங்களே குணப்படுத்துகிறோம் என கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, மகள் சங்கீதாவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சங்கீதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் சங்கீதா தவறான சிகிச்சையால்தான் உயிரிழந்தாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.