மகிழ்ச்சியான செய்தி.. தமிழகத்தின் முதல் கொரோனா நோயாளி குணமாகி வீடு திரும்பினார்!
First tamilnadu corono patient discharged to home
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
ஓமனில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகைதந்த 45 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த மார்ச் 7 ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த வாரம் அவரது உடல்நிலை சீராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கண்கானிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த நபர் முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும் இன்று அந்த நபரை வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த நபர் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் டெல்லியிலிருந்து சென்னை வந்த வேறொரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.