பாட்டி வீட்டிற்கு செல்ல மறுத்த 12 வயது சிறுவன்! காரணத்தை கேட்ட தாய்க்கு பேரதிர்ச்சி! 2 ஆண்டாக நடந்த கொடூரம்... வெளிவந்த பகீர் உண்மை...!!!
ஈரோட்டில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தாய்வழிப் பாட்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாய்வழிப் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். லக்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்ல சிறுவன் மறுத்த நிலையில், பெற்றோர் விசாரித்தபோது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாட்டி வீட்டுக்கு செல்ல மறுத்த சிறுவன்
சிறுவனின் பெற்றோர் சமையல் ஆர்டர்கள் எடுத்து செய்து வருகின்றனர். குறிப்பாக சுபநிகழ்ச்சி நாட்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால், மகனை லக்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி மீண்டும் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், சிறுவன் கடுமையாக மறுத்ததுடன் பதற்றத்துடனும் காணப்பட்டான். இதனால் சந்தேகமடைந்த தாய், மகனிடம் விசாரித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொல்லை என புகார்
அப்போது, ஆறாம் வகுப்பு படித்த காலம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாட்டி தனக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சிறுவன் கண்ணீருடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், தனது தாயின் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அங்கு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
போக்சோ சட்டத்தில் பாட்டி கைது
இதைத்தொடர்ந்து சிறுவனின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் பாட்டி மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறுவனுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.