தமிழகத்தை புயல் தாக்கும் அபாயம்.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
cyclone in tamilnadu
அக்டோபர் 6,7,8 ஆகிய தேதிகளில் குமரிக் கடல், லட்சத்தீவு, தெற்குக் கேரளா, மத்தியக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அதே போல் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றம் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபா் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி 6, 7ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்காக நகரக் கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இதனால் மீனவா்கள் குமரி மற்றும் லட்சத் தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதியில் அக்டோபா் 6 முதல் 8ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் அக்டோபா் 5ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.