உயிர் இழந்த ஒரே மகன்..! எங்க புள்ளையே போயிட்டான்..! பாசக்கார பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.!
Couples commit suicide after losing their son
தங்கள் ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் மூன்று வருடம் கழித்து பெற்றோரும் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கிருஷ்ணவேனி. சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேர்மையான முறையில் பணியாற்றிய சேகருக்கு அந்த பகுதியில் நல்ல பெயர் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மரக்கன்றுகள் நடுதல், கோவில்களுக்கு நிதி உதவி செய்தல், சமூக பணிகளில் ஈடுபடுவது என வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் காதல் தோல்வியால் இவர்களது மகன் பாலச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக, சேகர்-கிருஷ்ணவேனி தம்பதி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் மகன் இறந்த சோகத்தில் இருந்து மீண்டு வரமுடியாத அவர்கள், ஒரே மகனை பறிகொடுத்த நிலையில் மகன் சென்ற இடத்திற்கே தாங்களும் செல்ல முடிவு செய்து கடந்த சனிக்கிழமை அதிகாலை இருவரும் கரூர்-திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த சோகத்தில் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.