மதுபோதையில் அப்பாவி மக்களை வெட்டிய ரௌடி கும்பல்.. அம்பத்தூரில் பரபரப்பு செயல்.!
மதுபோதையில் அப்பாவி மக்களை வெட்டிய ரௌடி கும்பல்.. அம்பத்தூரில் பரபரப்பு செயல்.!
சென்னையில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 53). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு நடந்துசென்று கொண்டு இருக்கும் போது, ஆட்டோவில் வந்த 2 பேர், அரிவாளால் மாணிக்கத்தை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இதே கும்பல், திமுக பிரமுகர் ஸ்ரீராம் எனப்வரின் கார் கண்ணாடியை பட்டாகத்தியால் வெட்டி சேதப்படுத்தி, புன்னியகுமார் (வயது 50), பிரபாகரன் (வயது 30), வினோத் குமார் (வயது 35) ஆகியோரையும் வெட்டி சென்றது. இதனால் படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மற்றொருவர் தப்பி சென்ற நிலையில், அவரையும் அடுத்த சிலமணிநேரத்தில் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில், அம்பத்தூர் கள்ளிகுப்பம் முருகம்பேடு பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் (வயது 30) என்பதும், உள்ளூரில் ரௌடிபோல வலம்வரும் கணேஷின் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் இருப்பதும் அம்பலமானது.
இவர் தனது கூட்டாளியுடன் மதுபோதையில் சுற்றித்திரிந்து, அப்பாவி பொதுமக்களை வெட்டி, திமுக பிரமுகரின் காரை சேதப்படுத்தி சென்றதும் உறுதியானது. இதனையடுத்து, கணேஷ் குமார் உட்பட 2 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.