நள்ளிரவில் கடத்தப்பட்ட இளைஞர் மைனர் பெண்ணுடன் கட்டாயத் திருமணம்; பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன..?
boy kidnapped midnight and forced for marriage
வேலூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் நள்ளிரவில் கடத்தப்பட்டு மைனர் பெண்ணுடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பனின்மகன் சதீஷ். இவருக்கு வயது 21. இவர் திருப்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் செல்வியை(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. செல்விக்கு வயது 17. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதையே காரணம் காட்டி சதீஷின் பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளனர்.
பெற்றோரின் பேச்சைக் கேட்டு கடந்த சில நாட்களாக சதீஷ் செல்வியுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த செல்வி சதீஷ் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வியின் பெற்றோர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சதீஷை அவரது நண்பரின் உதவியுடன் சக்கரகுப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு வரவழைத்துள்ளனர்.
கோவிலுக்குச் சென்ற சதீஷ் அங்கு காத்துக் கொண்டிருந்த செல்வி மற்றும் அவரது குடும்பத்தினரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் செல்வியின் குடும்பத்தினர் சதீஷை செல்வியின் கழுத்தில் கட்டாயமாக தாலி கட்ட செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சதீஷின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்கள் மகனை கடத்தி மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சுமதியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் புகாரில் சதீஷின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.