Madurai News: அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை.. டீக்கடை வாசலில் பயங்கரம்.!
Madurai Crime News Today: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுக பிரமுகர் செந்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். டீக்கடை வாசலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதால் கொடூர செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
டீக்கடை வாசலில் மதுபானம் அருந்தியதை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், சாமநத்தம், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் செயல்படும் டீக்கடையை நடத்தி வருபவர் செல்வம். இவரின் மகன் செந்தில். இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். 33 வயதாகும் செந்திலுக்கு திருமணம் முடித்து மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
வாக்குவாதம் என தகவல்:
இதனிடையே, இன்று காலை செந்தில் வழக்கம்போல அதிகாலை நேரத்தில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது, கடை வாசலில் கும்பல் ஒன்று மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதே கும்பல் முன்னதாக மதுபானம் அருந்தியதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தலை துண்டித்து கொடூர கொலை:
இந்நிலையில், இன்று காலை கடையை திறக்க வந்த செந்திலை, மர்ம நபர்கள் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த சுலைமான் காவல் துறையினர், அதிமுக பிரமுகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதுபானம் அருந்திய கும்பலை தட்டிக்கேட்டதால் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பிரமுகரின் கொலை சம்பவத்துக்கு, அதிமுக & அதன் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.