பிறந்து நான்கு நாட்களே ஆன பெண்குழந்தை உயிரிழந்ததாக கூறி முட்புதரில் புதைத்த பெற்றோர்.! பெண் சிசுக் கொலையா என விசாரணை.!
4 days new born baby mysterious died near madurai

பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்ததாக கூறி புதைக்கப்பட்டுள்ள சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெருவை சேர்ந்தவர்கள் தவமணி - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா மீண்டும் கர்ப்பமானார். இதனை அடுத்து கடந்த 10 ஆம் தேதி நான்காவதாக சித்ராவுக்கு மீண்டும் பெண்குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் குழந்தை உடல்நல கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகில் இருந்த முள் புதரில் குழந்தையை பெற்றோர் புதைத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நான்காவதாக பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.