ரூ.100 கோடி கோயில் நிலம் அவுட்..! நீதிமன்ற உத்தரவையும் மீறி நடந்த நில மோசடி.... 1880 முதல் அடுக்கடுக்காக சிக்கும் ஆவணங்கள்! சிபிசிஐடி வளையத்தில் சார்பதிவாளர்..!!!
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. சார்பதிவாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று, பழமையான ஆவணங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
பழனியில் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. வழக்கின் பின்னணியில் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் வாக்குமூலங்களை சேகரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
நில மோசடி வழக்கு எப்படி தொடங்கியது?
பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச. முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!
ஆவணங்கள், அதிகாரிகளிடம் தொடர் விசாரணை
தமிழக அரசின் உத்தரவையடுத்து கடந்த 15.07.2026 அன்று இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரில் பழனிக்கு சென்று கோயில் செயல் அலுவலர் கணபதி மற்றும் பிற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. 1880-ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வரும் பழமையான நில ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
முன்ஜாமீன் பெற்ற சார்பதிவாளர் ஆஜர்
இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றிருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் வருவாய்த் துறை, மின்வாரியத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த நில மோசடியில் தொடர்புடைய பிற முக்கிய நபர்களின் பங்கையும் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலையே செய்யாமல் ரூ.3.23 கோடி அவுட்". எ.வ.வேலு வீட்டில் DVAC ரெய்டு.. பின்னணியில் இருந்த 'அந்த' 4 பக்க கடிதம். தமிழகத்தையே உலுக்கும் ஊழல்..!