நேபாள பேரழிவு அழிவுக்கான ஆரம்பமா? பாபா வாங்கா உண்மையில் இதை கணித்தாரா? பின்னணியில் உள்ள உண்மை தகவல்..!!!
நேபாள வெள்ளத்தை பாபா வங்காவின் உலக அழிவு கணிப்புடன் இணைத்து பரவும் தகவல்களின் உண்மை என்ன? ஆதாரமற்ற வதந்திகள் குறித்து விளக்கம். பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை வைத்து, ‘உலக அழிவு தொடங்கிவிட்டது’ என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதற்கு பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூற்றுகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.
இயற்கை பேரிடர்கள், போர் பதற்றம், தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் பாபா வங்காவின் பெயரில் கூறப்படும் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. உண்மையில் இவற்றில் எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளது என்பதே கேள்வியாகியுள்ளது.
நேபாள வெள்ளத்துடன் இணைக்கப்படும் ‘உலக அழிவு’ கணிப்பு
நடப்பு ஆண்டில் உலகின் 7 முதல் 8 சதவீத பகுதிகள் இயற்கை சீற்றங்களால் அழியும் என்றும், மிகப்பெரிய நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படும் என்றும் சமூக வலைதளப் பதிவுகள் கூறுகின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் இதனுடன் தொடர்புபடுத்தி, ‘பாபா வங்கா கணித்தது நடக்கத் தொடங்கிவிட்டது’ என சில பதிவுகள் பரப்பப்படுகின்றன.
அதோடு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து நடுத்தர மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும், 3-வது உலகப் போர் ஏற்படும், உலக வங்கிகள் திவாலாகும், ரஷ்ய அதிபர் புடின் பதவி விலகுவார் போன்ற தகவல்களும் சேர்த்து பகிரப்பட்டு வருகின்றன. தைவான் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்கள் உலக அரசியலில் பெரிய மோதலை உருவாக்கும் என்றும் சில பதிவுகள் தெரிவிக்கின்றன.
AI முதல் ஏலியன்கள் வரை பரவும் பல்வேறு தகவல்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்றும், வரும் நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய விண்கலம் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களை சந்திப்பார்கள் என்றும் மேலும் பல தகவல்கள் வைரலாகி வருகின்றன.
தொடர்ச்சியாக வெளியாகும் இயற்கை பேரிடர் செய்திகள் மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதையே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பரபரப்பான பதிவுகள் வேகமாகப் பகிரப்படுகின்றன. குறிப்பாக பாபா வங்காவின் பெயர் இடம்பெறுவதால், வைரல் வதந்திகள் கூட உண்மையான கணிப்புகள் போல பலரால் நம்பப்படுகின்றன.
பாபா வங்கா உண்மையில் இதைக் கணித்தாரா?
பாபா வங்கா 1996-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்த காலத்தில் மேற்கண்ட தகவல்களை இப்படிப்பட்ட விரிவான வடிவில் எழுதி வைத்தார் அல்லது நேரடியாகக் கூறினார் என்பதற்கான அதிகாரப்பூர்வமான, முறையான ஆவணங்கள் இல்லை.
9/11 தாக்குதல், கொரோனா தொற்று உள்ளிட்ட பல உலக நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படும் தகவல்கள் பரவலாக உள்ளன. ஆனால், அவற்றில் பலவும் பின்னாளில் அவருடைய பெயருடன் இணைக்கப்பட்டதாகவே ஆய்வுகள் மற்றும் செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, நேபாள வெள்ளம் உள்ளிட்ட தற்போதைய நிகழ்வுகளை பாபா வங்காவின் பழைய கணிப்புகளுடன் நேரடியாக இணைப்பதற்கு ஆதாரம் இல்லை. சமூக வலைதளங்களில் அதிக பார்வைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்படும் ஆதாரமற்ற தகவல்கள் என்பதால், இதுபோன்ற பதிவுகளை பகிர்வதற்கு முன் அதன் மூலத்தையும் நம்பகத்தன்மையையும் சரிபார்ப்பது அவசியம்.