WC T20: ஹாட்ரிக் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி அசத்தல்! அயர்லாந்தை பந்தாடியது
Womens wt20 india won 3rd in row
மகளிர் டி20 உலகக்கோப்பையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பையில், இந்திய மகளிர் அணி இன்று (வியாழக்கிழமை) அயர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நல்ல தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மந்தானா 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக விளையாடினார். ஆனால், அவர் 18 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத், வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹேமலதா ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்கு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிதாலி ராஜ் அரைசதம் அடித்தார். அவர் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து 19-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது.
146 எங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து வீராங்கனைகள் துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தபின் ரன் வேகம் குறையத்தொடங்கியது.
அதன்பின்னர் அயர்லாந்து வீராங்கனைகளால் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ துவங்கின. இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் இது 8 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் வீராங்கனை ஜாய்ஸ் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு அடுத்தபடியாக துவக்க வீராங்கனை ஷில்லிங்டன் 23 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ராதா யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணியின் மிதாலி ராஜ் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பையில் ஆடிய மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.