இதெல்லாம் ரவுடித்தனத்தின் உச்சம்..! கொந்தளித்த விராட் கோலி.!
மைதானத்தில் நடந்த இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என விராட் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரைப் ரசிகர்கள் சிலர் இனவெறியை தூண்டும் வகையில் கிண்டல் செய்துள்ளனர்.
அதேபோல் டெஸ்ட் போட்டியின் 4 வது நாளான நேற்றும் சில ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால், கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அங்கு நடந்த இனவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், இனவெறி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. எல்லைக்கோட்டுக்கு அருகே இது போன்று பல ஏற்க முடியாத நிகழ்வுகளை சந்தித்திருக்கிறோம் ஆனால் இது ரவுடித்தனத்தின் உச்சமாக உள்ளது. மைதானத்தில் இது போன்றுநடப்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.