தோனிக்கு மாற்றாக ரிஷப் பண்ட் சரியான தேர்வா? பண்டின் பேட்டிங்கால் ரசிகர்கள் அதிருப்தி
Rishapah pant batting is being criticized
இந்திய கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் தோனி. அவருக்கு 38 வயதாகிவிட்டதால் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற கோணத்தில் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்வு செய்யும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்டிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நான்காவது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால் 20, 0 என ரன்கள் எடுத்து மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக கடைசி ஒருநாள் போட்டியில் வந்த வேகத்திலேயே முதல் பந்தில் டக் அவுட்டானார்.
இதனைத் தொடர்ந்து பண்டின் மீது பலரும் எதிர்ப்பு அலைகள் வீசத் துவங்கிவிட்டனர். அவர் ஐபிஎல் தொடரில் ஆட மட்டுமே சரியானவர்; மீண்டும் மீண்டும் தேவையில்லாத ஷாட்களை அடித்து ஆட்டமிழக்கிறார்; ஆட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடும் பக்குவம் அவருக்கு வரவில்லை; நான்காவது இடத்தில் இறங்க இவர் தகுதியானவர் கிடையாது என பல விமர்சனங்கள் இவர் மீது எழத் துவங்கிவிட்டது.
மேலும் இவருக்கு பதிலாக இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அவர்கள் பொறுப்புடன் ஆடும் மன பக்குவம் கொண்டவர்கள். அல்லது கே.எல்.ராகுலை முழு நேர கீப்பராக பயன்படுத்தி நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கலாம் என ஆலோசனை கூறி வருகின்றனர்.