துவங்கியது பலப்பரீட்சை! முதல் ஓவரிலேயே இங்கிலாந்தை அலறவிட்ட இம்ரான் தாஹிர்
Imran tahir rocked on the first over in first match
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இங்கிலாந்தின் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது. இன்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் டாஸ் வென்ற டூப்ளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மற்றும் பெயர்ஸ்டோவ் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் டூப்ளஸிஸ் முதல் ஓவரிலேயே ஷாக் கொடுக்கும் வகையில் லெக் ஸிபின்னர் இம்ரான் தாஹிரை பந்துவீச வைத்தார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் இம்ரான் தாஹிர் அனைத்து பேட்ஸ்மேன்களையும் தடுமாற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டூப்ளஸிஸின் திட்டத்திற்கு நல்ல பலனாக ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பெயர்ஸ்டோவ் சந்தித்த முதல் பந்தில் அவுட்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணியினை கலங்கடிக்க செய்தார் இம்ரான் தாஹிர்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 13 ஓவர் முடிவில் 83 ரன்கள் எடுத்துள்ளனர்.