ஆசிய கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஆரம்பித்த வங்கதேச அணி அபார வெற்றி!!
bangladesh won in first odi of asia cup
14 ஆவது ஆசிய கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று துபாயில் துவங்கியது. இன்றைய முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மோர்தசா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய தமிம் இக்பால் முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறினார். மேலும் மலிங்கா வீசிய அந்த முதல் ஓவரிலேயே வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் மற்றும் சாகிப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய முஷபிகுர் ரஹீம் மற்றும் முகமது மிதுன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 25வது ஓவரில் முகமது மிதுன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷபிகுர் ரஹீம் தனது சதத்தை கடந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 49 ஓவர்களில் 261 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணியின் சார்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் தரங்கா ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டினார். ஆனால் முஸ்தாபிஜூர் வீசிய இரண்டாவது ஓவரில் கடைசி பந்தில் குஷால் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக இலங்கை அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் திணறியது.
இதனைத் தொடர்ந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே ஆசிய கோப்பை முதல் போட்டியில் வங்கதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணியின் சார்பில் மோர்தசா, முஸ்தாபிஜூர் ரஹ்மான், ஹாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.