உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அப்பத்தி ராயுடு செய்த நக்கலான ட்வீட்!
Ambati Rayudu tweet about vijayshankar

வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வெளியிட்டார்.
இந்திய அணியை பொறுத்தவரை நான்காவது வீரராக களமிறங்க கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு வீரர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இறுதியில் தற்போது அந்த இடத்தில் இறங்க தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் தேர்வாகியுள்ளார்.
இந்த இடத்தில் இறங்க தமக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அம்பத்தி ராயுடு பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளார். இவர் இந்த ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் மட்டுமே சிறப்பாக ஆடினார். அதன் பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடவில்லை. மேலும் இந்த ஐபிஎல் தொடரிலும் தடுமாறி தான் வருகிறார்.
ஆனால் அதே நேரத்தில் விஜய்சங்கர் பேட்டிங்கில் சற்று சுமாராக இருந்தாலும் அவரிடம் பவுலிங் மற்றும் பீல்டிங் என மொத்தம் மூன்று பரிணாமங்கள் (three-dimensional) உள்ளதாக எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். ஒரு வகையில் அதுவும் உண்மை தானே.
இந்நிலையில் இந்த விளக்கத்தை கேலி செய்யும் விதமாக அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஜய்சங்கர் குறித்த three-dimensional கருத்தை கேலி செய்யும் விதமாக, "உலகக்கோப்பை போட்டிகளை காண புதிய 3D கண்ணாடிகள் ஆர்டர் செய்துள்ளேன்" என நக்கலாக பதிவிட்டுள்ளார்.