மீண்டும் மீண்டும் ஏமாற்றம்! திடீர் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னணி வீரர்
Ambati rayudu planned for retirement

இந்திய கிரிக்கெட் அணியின் இடைநிலை பேட்ஸ்மேனாக சில காலம் ஆடிய அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கான உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார் அம்பத்தி ராயுடு. ஆனால் 15 வீரர்களை தாண்டி ரிசர்வ் வீரராகவே தேர்வானார். அந்த சமயத்தில் தேர்வாளர்கள் மற்றும் விஜய் சங்கரை கேலி செய்யும் விதமாக "3D" கண்ணாடி வழங்கியுள்ளதாக கிண்டல் செய்தார்.
இந்நிலையில் முதலில் ஷிகர் தவான் காயம் காரணமாக நீக்கப்பட்ட போதும் தற்போது விஜய் சங்கர் நீக்கப்பட்ட பின்பும் அம்பத்தி ராயுடுவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக ரிஷப் பண்ட் மற்றும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.
இதனைத் தொடர்ந்து மனதளவில் பாதிக்கப்பட்ட அம்பத்தி ராயுடு பிசிசிஐயிடம் தனது ஓய்வை குறித்து அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
33 வயதான அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டியில் 1694 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 47.05.