ஏழு நாட்களில் ஒரு நாள் மட்டுமே முதலீட்டாளர்கள் சந்திப்பு! 13,000 கோடி முதலீடா...? முதல்வர் விஜய்யின் லண்டன் பயண ரகசியத்தை அம்பலப்படுத்திய திமுக...!!!
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் ரூ.13,000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அரசு அறிவித்த நிலையில், பயணம் குறித்து திமுக எழுப்பிய கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தின் மூலம் ரூ.13,000 கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பயணத்தின் முழு நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
லண்டன் பயணம் குறித்து திமுக கேள்வி
முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுடன் விஜய்யின் பயணத்தை ஒப்பிட்டு பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஸ்டாலின் தனது வெளிநாட்டுப் பயணங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் செய்தியாளர்களைச் சந்தித்து பயணத்தின் நோக்கம் மற்றும் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கியதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பான தகவல்கள் ஏன் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒருநாள் முதலீட்டாளர் சந்திப்பு? எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ஏழு நாட்கள் கொண்டதாக கூறப்படும் பயணத்தில் ஒரு நாள் மட்டுமே முதலீட்டாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், மற்றொரு நாளில் கார் பந்தயத்தை பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு, மீதமுள்ள நாட்களில் முதலமைச்சரின் நிகழ்ச்சி நிரல் என்னவாக இருந்தது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அரசுமுறைப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற சந்திப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.13,000 கோடி முதலீடு குறித்து எதிர்பார்ப்பு
ஒருநாள் முதலீட்டாளர் சந்திப்பின் மூலம் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அரசு கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த முதலீடுகள் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து கிடைத்தன, எந்த துறைகளில் முதலீடு செய்யப்பட உள்ளது, அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு என்ன என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளியாக வேண்டிய நிலை உள்ளது.
இதனிடையே, லண்டன் பயணம் தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தவெக அரசு தரப்பிலும் முதலமைச்சர் விஜய் தரப்பிலும் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பயணத்தின் முழு நிகழ்ச்சி நிரல் மற்றும் ரூ.13,000 கோடி முதலீடு தொடர்பான ஆவணங்கள் குறித்து அரசு அளிக்கும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட விவாதத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குஷியோ குஷி.... பெண்களுக்கு CM விஜய் கொடுத்த அந்த 3 மெகா சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் தமிழகம்...!!!