தமிழக சட்டசபையில் உதயநிதி பேசப்பேச ரசித்து கேட்டு சிரித்த முதல்வர் விஜய்! அப்படி என்னதான் பேசினார்.... அந்த காட்சியை நீங்களே பாருங்க!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் அரசியல் அனுபவம் மற்றும் அவையில் சம உரிமை குறித்து கருத்து தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் சூடுபிடித்தன. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
அவர் பேசும்போது, முதலமைச்சரும் தானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் ஆட்சியை வழிநடத்தும் அனுபவத்தில் திமுக தான் சீனியர் என்றும் கூறினார். 1967ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் இருந்த அனுபவம் இருப்பதால், அந்த அனுபவங்களை பகிர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
“அரசியல் அனுபவத்தில் நாங்கள்தான் சீனியர்”
அவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரே காலேஜில் படித்திருந்தாலும் அரசை நடத்துவதில் திமுகவுக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது. அதனால் தேவையான இடங்களில் எங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.
அதன்பின் சபாநாயகரை நோக்கி பேசிய அவர், இன்று தானும் முதலமைச்சரும் சேர்ந்து உங்களை அவைத் தலைவராக அழைத்து வந்துள்ளோம் என்று கூறினார். அதேபோல் அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அனைவருக்கும் சம உரிமை வேண்டும்
மேலும், “நீங்கள் கோபப்படக்கூடாது. நாங்களும் உங்களை கோபப்பட வைக்கும் வகையில் நடக்க மாட்டோம்” என்று சிரிப்புடன் கூறிய உதயநிதி, அவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அளவில் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து கோரிக்கை
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியத்துவம் குறையக் கூடாது என்றார். அது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படாமல் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவையில் கேட்டுக் கொண்டார்.