டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடா; தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு.!
ttv thinakaran and 18 mla
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை நேற்றுமுன்தினம் வழங்கியது. இந்நிலையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இல்லை அதனால் முதல்வரை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்தார்.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய நீதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியது. இந்த நிலையில் இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா நீதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒருவாரமாக வெளிவரும் தீர்ப்பிற்காக தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியான தீர்ப்பானது தகுதி நீக்கம் செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். தினகரன் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். சபாநாயகரின் முடிவு தவறு என்பதை உலகிற்கு உணர்த்த மேல்முறையீடு செய்ய உள்ளோம். 3 வது நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து 30 முதல் 90 நாட்களுக்குள் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். 3வது நீதிபதியின் தீர்ப்பில் பல குறைகள் இருப்பதாக எங்களது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேல்முறையீடு தொடரும் போது, வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க கோருவோம். மேல்முறையீட்டில் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் கூறிய தீர்ப்பே வரும் என நம்புகிறோம்.