அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்.? இந்த நேரத்தில் அதிரடி ட்வீட் போட்ட ஓபிஎஸ்.!
தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தற்போது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்கின்ற போட்டி நிலவி வருவதால் அதிமுகவில் நடந்து வரும் மோதல்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இருந்துவருகிறது.
இந்தநிலையில் சென்னையில் 6ஆம் தேதி ஆலோசனை செய்து முடிவெடுத்து 7ஆம் தேதி அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிப்போம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என பதிவிட்டுள்ளார்.